தமிழக டிஜிபி பெயரில் பரவும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் இணைய வழியில் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இந்த இணைய வழி மோசடிகளில் மக்கள் தங்களது பணம் மற்றும் சுய விபரங்களை பறிகொடுத்து வருகின்றனர். இதனை தடுக்க காவல்துறையும், சைபர் கிரைம் காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக டிஜிபி பெயரில் பரவும் போலி குறுஞ்செய்திகளை நப வேண்டாம் என பொதுமக்களுக்கு டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
காவல்துறை தலைமை இயக்குநர் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, போலி நபர்கள் அமேசான் அன்பளிப்பு கூப்பன்கள் வாங்கி அனுப்பும்படி வாட்ஸ் அப், குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதாக தெரிய வருகிறது.
இந்த போலியான குறுஞ்செய்தியை பொருட்படுத்த வேண்டாம். போலி குறுஞ்செய்திகளை அனுப்புவோர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். போலி குறுஞ்செய்திகளை அனுப்பும் அந்த நபரை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.