ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 200 சவரன் வரை நகைகள் திருடு போனதாக புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் 60 சவரன் தங்க நகைகள் திருடு போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவரும் போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஈஸ்வரியிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு சொத்து ஆவணங்கள் போன்றவை போலீசாரால் தற்போது வரை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நேற்று 43 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 60 சவரன் தங்க நகைகள் மட்டுமே காணாமல் போனதாக புகார் அளித்திருந்த நிலையில், அதையும் தாண்டி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது போலீஸாரை குழப்பத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், ஐஸ்வர்யா தனது நகைகள் குறித்த விவரங்கள் முழுவதையும் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், சுமார் 200 சவரன் வரை நகைகள் திருடு போனதாகத் தெரிவித்துள்ளார். தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக புதிய வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
தயிர் பாக்கெட்டில் இந்தி கட்டாயம் என்று அறிவிப்பை திரும்பப்பெற்ற உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம்