அதிமுக பொதுக்குழு விவகாரத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 4 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஷ்வரி அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு இன்று பட்டியலிடப்பட்டிருந்தது. விசாரணையின் போது நேரமின்மை காரணமாக வழக்கை நாளை தள்ளி வைக்கலாமா என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் நாளை வேண்டாம் என்றும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு தள்ளி வைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு காலாவதியாகிவிட்டதாக ஒரு வாதம் பதிவு செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் பதிவு செய்துகொண்டு, அதிமுக பொதுக்குழு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை, ஜனவரி 4 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தள்ளி வைக்கப்படுவதாக கூறி உத்தரவிட்டனர்.
இதனிடையே இந்த வழக்கு விசாரணையின் எழுத்துப்பூர்வமான அனைத்து வாதங்களையும் தாக்கல் செய்வதை உறுதி செய்யுமாறு இரு தரப்பினருக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
பலரையும் உருக வைத்த 8 வயது சிறுமியின் கடிதம்!