புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பிற்கு ஆதரவு திரட்டும் வகையில், அதிமுகவினர் வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதரவு திரட்டினர்.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முழு அதிகாரத்துடன் செயல்படவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடவும், தனி தேர்வாணையம் அமைத்து உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை முழுமையாக வழங்கிடவும், மத்திய நிதி குழுவில் புதுச்சேரி மாநிலம் இணைக்கப்பட்டு அதிக நிதி வருவாய் கிடைத்திடவும், அறிவிக்கப்படும் திட்டங்கள் உடனுக்குடன் செயல் வடிவம் பெற்றிடவும், மக்களின் தேவை அறிந்து தன்னிச்சையாக மாநில அரசு செயல்படவும், நிதி நிலைமையில் தன்னிறைவு பெற்றிடவும், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடியார் ஆணைப்படி புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மாநில கழக செயலாளர் அன்பழகன் டிசம்பர் 28-ம் தேதி முழு கதவடைப்பு (பந்த்) போராட்டம் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த போராட்டத்திற்கு ஆதரவு திரட்டவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆதரவு கோரி பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் புதுச்சேரி அண்ணா திருவுருவ சிலையில் தொடங்கி அண்ணாசாலை, நேரு வீதி, காந்தி வீதி, புஸ்ஸி வீதி, உழவர் சந்தை, பெரிய மார்கெட், புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதரவு திரட்டினர்.
இதில் முன்னாள் மாநில செயலாளர் நடராசன், மாநில புரட்சித் தலைவி பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில கழக துணை தலைவர் ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, கணேசன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள், காந்தி, நாகமணி, உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், உட்பட கழகத்தினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை