Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக பொதுக்குழு எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு வழக்கை நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

    அதிமுக பொதுக்குழு எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு வழக்கை நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

    அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கை தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் விசாரணைக்குப் பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்.’ என தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்ட தரப்பில், ‘தனி நீதிபதி தனது அதிகாரத்தின் வரம்பை மீறி இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இந்த வழக்கின் கோரிக்கையே ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பது தான். ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பது தவறு.

    பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரும் இணைந்துதான் கூட்ட வேண்டும். எதிர்காலத்தில் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அது இயலாத காரியம், நாங்கள் இருவரும் மீண்டும் இணைந்து செயல்படுவதற்கான சூழல் இல்லை. எனவே, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கையிடப்பட்டிருந்தது.

    இந்த மேல்முறையீட்டு வழக்கு மற்றும் தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டிருந்த கூடுதல் மனுக்கள், நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர். இந்த உத்தரவின் பேரில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இதே போல அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்துள்ள இரண்டு வழக்குகளை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இரண்டு மேல்முறையீடு வழக்குகளையும் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட வேண்டும் என முறையிட்டார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர். இதன் படி இந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....