மங்களூரில் ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டுவெடிப்புக்கு காரணமான குற்றவாளி ஷாரிக் தனது வாட்ஸ் அப் டிபியில் கோவையில் உள்ள ஆதியோகி சிவன் சிலையை வைத்திருந்தது காவல்துறைக்கு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
முன்னதாக கடந்த நவம்பர் 19 ஆம் தேதி மங்களூரில் ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் பயணி மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர். இது திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என காவல்துறை தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து இந்தச் சம்பவத்திற்கு காரணமான குற்றவாளியான முகமது ஷாரிக் கவால்துறையால் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த முகமது ஷாரிக், கடந்த நவம்பர் 19 ஆம் தேதி மங்களூருவில் வெடிமருந்து குச்சிகள், ஒயர்கள், பேட்டரிகள் போன்றவற்றை பொருத்தப்பட்ட குக்கருடன் ஆட்டோவில் பயணம் செய்தார். அப்போது குக்கர் குண்டு வெடித்தது. இந்தச் சம்பவத்தில் முகமது ஷாரிக் படுகாயமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரால் இன்னுமும் பேசமுடியவில்லை.
இதைத்தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை இந்தச் சம்பவம் தொடர்பாக மங்களூரு, சிவமொக்கா, மைசூரு, தீர்த்தஹள்ளி உள்ளிட்ட 7 இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் ஷாரிக் தங்கியிருந்த வாடகை வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருள்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரித்த காவல்துறைக்கு அடுத்தடுத்த அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்து வருகின்றன.
குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் கோவை காந்திபுரம் பகுதியில் தங்கியிருந்ததாகவும், அப்போது நீலகிரியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவருடன் பழகி அவருடைய ஆவணங்களை வைத்து, சிம் கார்ட் வாங்கியதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுரேந்திரனிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும் மதி ‘மகிழ் வியன் அகம்’ என்ற விடுதியில் ஷாரிக் தங்கியிருந்ததால் அக்கடைக்கும் சீல் வைக்கப்பட்டு, உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மங்களூர் காவல்துறையினர் கூறுகையில், கோவை கார் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின், மங்களூர் சம்பவத்தில் காயமடைந்த ஷாரிக் இருவருமே ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள்தான் என்றும் ஐ.எஸ் இயக்கத்தின் ஆதரவாளர்கள் மூலம் கடந்த சில ஆண்டுகளாகவே கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் சதித்திட்டம் தீட்டிவந்திருக்கின்றனர் என்றும் தெரிவித்தனர்.
மேலும் தற்போது வரை ஜமேசா முபினும் ஷாரிக்கும் தொடர்பில் இருந்ததற்கான ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், கோவையில் தங்கியிருந்தபோது ஷாரிக் யாரையெல்லாம் சந்தித்தார் எனத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் 3 நாட்கள் தங்கியிருந்த குற்றவாளி ஷாரிக் எடுத்த ஆதியோகி சிவன் புகைப்படத்தை ஏன் வாட்ஸ் அப்பில் டிபியாக வைக்க வேண்டும் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஐ.எஸ் பயங்கரவாதிகளை போல புகைப்படம் எடுத்துக்கொண்டதும், ஷாரிக் நடந்து செல்லும் காணொளியும் வெளியாகி உள்ளது.