நடிகர் தனுஷின் புதிய திரைப்பட பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது ராக்கி மற்றும் சாணிக் காயிதம் திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, தனுஷ் எத்திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் தொடர்ந்து இருந்துகொண்டே வந்தது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இத்திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. லவ் ஸ்டோரி, ஃபிடா போன்ற தெலுங்கு படங்களை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.
மேலும், சேகர் கம்முலா தான் இயக்கிய டாலர் ட்ரீம்ஸ் திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்றுள்ளார். தனுஷும் ஆடுகளம், அசுரன் போன்ற திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். தேசிய விருதுகள் பெற்ற இரு ஜாம்பவான்கள் இணையும் படம் இது என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வெங்கட் அல்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்று மொழிகளில் வெளியாகப்போகும் வாரிசு….தயாரிப்பாளர் சொன்ன தகவல்