தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இன்று காலைமுதல் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தஜிகிஸ்தான் நாட்டில் சீன எல்லைப் பகுதிகளில் இன்று காலை 6.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. தஜிகிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது அண்டை நாடுகளான சீனா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தானிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து 4 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஃபைசாபாத்தில் இருந்து 265 கி.மீ தொலைவில் காலை 6.07 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, காலை 6.25 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 ஆகவும், காலை 7.05 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆகவும், காலை 7.37 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆகவும் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தீ மிதிக்கும்போது ஏன் பாதங்களில் காயம் ஏற்படுவதில்லை? – காரணம் தெரியுமா?