தென்காசி ரயில்வேயில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள தென்காசி-நெல்லை சாலையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட்டின் கீப்பராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த நித்யா சந்திரன் என்ற பெண் பணியாற்றி வருகிறார்.
இச்சூழலில், கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வழக்கம்போல நித்யா சந்திரன் பணியில் இருந்தபோது மர்ம நபர் ஒருவர் நித்யா இருக்கும் அறைக்குள் நுழைந்து பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றுள்ளார். அப்போது நித்யா அங்கிருந்த போன் ரிசீவரால் அந்த நபரின் தலையில் அடித்து தாக்கியுள்ளார்.
இதையடுத்து, அப்பெண் சத்தம் போடவே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்த நித்யா பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக பாவூர்சத்திரம் காவல்துறையினரும் ரயில்வே காவல் துறையினரும் விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் சோதனை நடைபெற்று வந்தது.
மேலும் ரயில்வே கேட்டிற்கு மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இந்தக் கட்டுமான பணிக்காக வட மாநில இளைஞர்கள் பலரும் அங்கே முகாமிட்டு வேலை பார்த்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பாபூர்சத்திரம் ரயில்வே ஊழியரிடம் தவறாக நடக்க முயன்ற கேரளாவைச் சேர்ந்த அனீஸ் என்ற இளைஞரை காவல்துறையினர் நேற்று இரவு பிடித்தனர். அப்போது அவருடன் நடத்திய விசாரணையில் பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து காவல்துறையினர் அனீஸ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாதிரி வாக்குப்பதிவு!