நேற்று மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற 58வது ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினை வீழ்த்தியது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ராயல்ஸ் அணி :
ராயல்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜாஸ் பட்லர் 11 பந்துகளுக்கு 7 ரன்கள் எடுத்து சக்கரியா பந்தில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 19 பந்துகளுக்கு 19 ரன்கள் எடுத்து மார்ஷ் வீசிய பந்தில் அவுட் ஆனார்.
தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் பெரிதும் சோபிக்காத நிலையில் இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
38 பந்துகளை எதிர்கொண்ட அஸ்வின், 50 ரன்கள் (4 ஃபோர், 2 சிக்ஸர்கள் உட்பட) எடுத்து அசத்தினார். சிறப்பாக ஆடிய அஸ்வின் மார்ஷ் வீசிய பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தேவ்தத் படிக்கல் 30 பந்துகளுக்கு 48 ரன்கள் அடித்து (6 ஃபோர், 2 சிக்ஸர்கள்உட்பட) அணியின் ஸ்கோரினை உயர்த்த உதவினார்.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் அடித்திருந்தது. டெல்லி தரப்பில் சக்கரியா, நோர்ட்ஜெ, மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
டெல்லி அணி :
161 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆட்டத்தைத் தொடங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்ரீகர் பாரத், தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்தில் விக்கெட் கீப்பர் சாம்சன் கைகளில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதன் பின்னர் கைகோர்த்த டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஜோடி அணியினை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் 62 பந்துகளில் 89 ரன்கள் (5 ஃபோர், 7 சிக்ஸர் உட்பட) அடித்தார். பொறுப்பாக விளையாடிய டேவிட் வார்னரும் அரைசதம் கடந்தார். இவர் 41 பந்துகளில் 52 ரன்கள் (5 ஃபோர், ஒரு சிக்ஸர்) அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு கை கோர்த்த இந்த ஜோடி, 101 பந்துகளுக்கு 144 ரன்கள் அடித்தது.
17வது ஒவரில் சாஹல் வீசிய முதல் பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்த மிட்செல் மார்ஷ்க்குப் பிறகு வந்த டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் இரண்டு சிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தினை அந்த ஓவரின் இறுதிப் பந்தில் முடித்து வைத்தார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறக்கப்பட்டதைப் பற்றி மனம் திறந்த அஸ்வின், ’இந்த சீனின் ஆரம்பத்திலிருந்தே முதலில் களமிறக்கப்படுவதைப் பற்றிய தெளிவான திட்டம் அணியினுள் இருந்து வந்தது. சில பயிற்சி ஆட்டங்களில் முதலாவதாக ஆடி பயிற்சியும் மேற்கொண்டிருந்தேன்; எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. சிறப்பான பேட்டிங்கிற்காக நான் கடினமாக பயிற்சி மேற்கொண்டிருக்கிறேன். அந்த பயிற்சி ஒரு நல்ல முடிவாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆட்டம் தோல்வியில் முடிந்திருந்தாலும் எனது ஆட்டத்தினைப் பற்றி நான் மகிழ்ச்சிக் கொள்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.
இரண்டு விக்கெட்டுகள் மற்றும் 89 ரன்கள் அடித்த மிட்செல் மார்ஷ்க்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியினை வான்கடே மைதானத்தில் எதிர் கொள்கிறது. புள்ளிப் பட்டியலில் சென்னை அணியானது 8வது இடத்திலும், மும்பை அணி 10வது இடத்திலும் உள்ளது.
ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு? ஐபிஎல் தொடரிலிருந்து ஏன் விலகினார் ஜடேஜா?