தருமபுரி அரசு மருத்துவமனையில் சகோதரிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை, தம்பி அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சென்னன் (வயது23). இவரது சகோதரிக்கு அதே கிராமத்தை சேர்ந்த, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ராஜேஷ் (31) என்பவர் அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ய முயன்றுள்ளார். முதலில் அந்த பெண் ராஜேஷை கண்டித்து அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று மதுபோதையில் இருந்த ராஜேஷ், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்க மீண்டும் முயற்சித்து உள்ளார். அந்த பெண் மறுத்து விட்டதால், ஆத்திரமடைந்த ராஜேஸ் அவரை சராமாரியாக தாக்கி உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடிவரவே, ராஜேஷ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணை, கிராமத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து சென்னன் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது நேற்றிரவு அங்கு வந்த ராஜேஷ் வளாகத்தில் ஓரமாக நின்று இருந்தார். இதனை பார்த்த சென்னன் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தாக்கியது தெரியவரவே ராஜேஷ் மீது ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வாலிபரை கொலை செய்த சென்னன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
கொலை நடந்த தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.