ஆலிவ் ரிட்லி ஆமைகள் சுமார் 120 மில்லியன் ஆண்டுகளாக இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவ்வகை ஆமைகள் தான் எங்கே பிறந்ததோ அங்கேதான் தன் முட்டைகளை இடும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. அவ்வாறாக இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள் தமிழக கடற்கரையோரங்களில் முட்டைகளை இட்டு வருகின்றன.
கடற்கரையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இடும் முட்டைகளை, நாய்கள் அழிப்பதும், கடற்கரையில் நடக்கும் மனிதர்களின் கால் பட்டு முட்டை உடைவதும் வாடிக்கையான ஒன்று. ஆனால் இந்த வாடிக்கையான நிகழ்வுகளில் இருந்து முட்டைகளை காப்பாற்ற வனத்துறை பல முயற்சிகளை செய்து வருகின்றன.
அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை இனப்பெருக்கத்திற்காக ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் கடலூர் மாவட்ட கடற்கரையோரம் வந்து முட்டையிட தொடங்கி உள்ளது. கடலூர் மாவட்டம் மட்டும் அல்லாது தமிழக கடற்கரையோரங்களின் பல இடங்களில் முட்டைகள் காணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடலூரில் மாவட்ட வன அலுவலர் செல்வம், வனச்சரக அலுவலர் அப்துல் ஹமீது, வனவர் குணசேகரன், வன காப்பாளர் ஆதவன், பாம்பு பிடி வீரர் செல்லா தலைமையிலான தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அதிகாலை நேரத்தில் கடற்கரையோரம் பயணம் செய்து அந்த முட்டைகளை சேகரித்து வருகின்றனர்.
சேகரித்த அந்த முட்டைகளை தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் அமைக்கப்பட்டு உள்ள குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்புடன் வைத்து வருகின்றனர். இது வரை 34 ஆமைகளில் இருந்து 4 ஆயிரத்து 16 முட்டைகளை சேகரித்து, பொரிப்பகத்தில் வைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை பெசன்ட் நகர், நீலாங்கரை, கோவளம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு உள்ளிட்ட இடங்களில் வனத் துறை சார்பில் ஆமைக் குஞ்சு பொறிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.