தமிழ் சினிமாவில் தனது கம்பீரமான நடிப்பினால் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தவர் நடிகர் விஜயகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த ரமணா, சத்ரியன், ஊமை விழிகள் உள்ளிட்ட பல படங்கள், இன்றும் நம் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.
அரசியல், திரைத்துறை இரண்டிலும் கலக்கி வந்த விஜயகாந்திற்கு தீடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக இரு வாழ்வில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலகினார். தற்போது ஓய்வு எடுத்துவரும் விஜயகாந்த், மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் சுப நிகழ்ச்சி ஒன்றில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஓராண்டு கால திமுகவின் ஆட்சியில் மின்வெட்டு அதிகம் உள்ளது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது.
ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும், வர வர கோட்டை விடுகிறார்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தேர் விபத்திலும் மக்கள் மீது வீண்பழி சுமத்துவதுபோல் உள்ளது என்றும் அனுமதி பெறவில்லை என்றால் தடுத்திருக்கலாம். இனிவரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் திமுக சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. அதிமுகவினர் சொல்வது போல் திமுக போட்டோ சூட் அரசியல்தான் செய்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு, அடிப்படை தேவையை மக்களுக்கு செய்தாலே நன்றாக இருக்கும் என்றார்.
விஜயகாந்த் உடல்நிலை குறித்து கேட்டதற்கு, கேப்டன் நன்றாக இருக்கிறார் என்றும், முன்பை விட சிறப்பாக இருப்பதாகவும் கூறினார். மேலும், பட்டின பிரவேசம் குறித்து கேட்டதற்கு தலைமை அறிவிப்பதாக தெரிவித்தார்.
சென்னை மறுசீரமைப்பு; புதுசா, சிறுசா, இனி 23 மண்டலங்கள்!