மத்திய பிரதேசத்தில் இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் ஸ்வார்ன் பாக் காலனியில் அமைந்துள்ள 2 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை 3.30 மணியளவில் தீப்பிடித்தது.
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தூங்கிக் கொண்டிருந்த மக்கள் தீ விபத்தில் சிக்கியதால், சம்பவ இடத்திலேயே 7 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள், என்ன நடப்பது என தெரிவதற்கு முன்பே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்த அக்ஷய் சோலங்கி கூறுகையில், “தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு, தீயணைப்புப் படையினர் தாமதமாக வந்தனர்.”அவர்கள் சீக்கிரம் வந்திருந்தால், சிலரின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்,” என்றார்.
மேலும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘அடுக்குமாடி குடியிருப்பின் ஒவ்வொரு தளத்திலும், விதிமுறைகளின்படி தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவப்படவில்லை. கட்டிடத்தின் உரிமையாளர் அன்சார் படேலை கைது செய்துள்ளோம். அவர் மீது 304ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிந்துள்ளோம்.
குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் எரிந்துள்ளன. இதுவரை 7 பேர் தீயில் கருகி பலியாகி உள்ளனர். ஆபத்தான நிலையில் 9 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றனர்.
பள்ளிக்கல்வித்துறையின் குழப்பங்கள்: முற்றுப்புள்ளி வைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!