இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கும் ரசிகப்பட்டாளம் வேறு எந்த அணிக்கேனும் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே! இந்த ரசிக பட்டாளத்திற்கு முதற்காரணம் என்னவென்று பார்த்தால் அந்த காரணமாக மகேந்திர சிங் தோனிதான் இருப்பார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பித்த காலத்தில் இருந்தே சென்னை அணியின் கேப்டனாக, ஆணி வேராக இருப்பவர் மகேந்திர சிங் தோனி!
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியானது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மாற்றம் திடீரென்று ஏன் என்ற கேள்வி அனைவராலும் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான பதில்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
தோனியை சென்னை அணி தாமாக முன் வந்து கேப்டன் பதவியில் இருந்து நீக்கி இருக்காது என்றே தெரிகிறது. ஏனென்றால் சென்னை அணிக்கு தோனி கேப்டனாக செய்தது அவ்வளவு! இதுவரை சென்னை அணி பங்கு பெற்ற அத்தனை ஐபிஎல் தொடரிலும் தோனி கேப்டனாக மட்டுமே செயல்பட்டுள்ளார்.
தோனி தலைமையில் சென்னை அணி இதுவரை நான்கு முறை ஐபிஎல் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றிருக்கிறது. சென்னை அணி என்றாலே முதலில் அனைவருக்கும் நியாபகம் வருவது மகேந்திர சிங் தோனியும் அவரின் தலைமையும்தான். இப்படியான சூழலில் கேப்டன் பதவி குறித்த இப்படியான அறிவிப்பு பலரையும் அதிரச் செய்ததில் எந்த வித ஆச்சரியமும் இல்லை என்றே தோன்றுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதற்கு முன்னம் சில போட்டிகளுக்கு மட்டும் சுரேஷ் ரெய்னா வழிநடத்தியுள்ளார். ஆனால் பெரும்பாலான போட்டிகளில் மகேந்திர சிங் தோனியின் தலைமையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இயங்கிக்கொண்டிருந்தது.
நாளை மறுநாள் 15 வது ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடஜாவுக்கு மகேந்திர சிங் தோனி விட்டுக்கொடுத்திருப்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடஜாவுக்கு வழங்கியது அணியின் நிர்வாகம் செய்த செயலாக இருக்காது என்றும் இது தோனியின் முடிவாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சென்னை அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே தோனி இம்முடிவை எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக தோனி செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பும் தோனி தனது கேப்டன் பதவியை விட்டு விலகினார் என்பதால், இந்த பதவி விலகல், பலரின் எண்ணத்திலும், உள்ளூர் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறப்போகிறாரோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிகழ்வுகளால் சென்னை அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
நாளை மறுநாள் நடக்கவிருக்கும் 15 வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும்போது மகேந்திர சிங் தோனி கேப்டனாக செயல்படமாட்டார். மாறாக ரவீந்திர ஜடஜா சென்னை அணியின் கேப்டனாக செயல்படுவார்.
இதையும் படியுங்கள்,
இரசிகர்களுக்கு ஐபிஎல் குறித்து நற்செய்தி சொன்ன கிரிக்கெட் நிர்வாகம் – இரசிகர்கள் ஆறுதல்!