திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று பல ஆயிரக் கணக்கில் மக்கள் மலைப்பாதையில் கிரிவலம் மேற்கொண்டு இறைவனை வழிபட்டு வருவது வழக்கம்.
மேலும் பக்தர்கள் கிரிவலத்தில் செல்லும்போது உள்ளத்தையும் உடலையும் மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உலகின் அமைதிக்கும், அனைவரின் நலன் வேண்டியும் வழிபடுவது நல்லது. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் குறைவான பக்தர்கள் வந்தனர். அப்போது கல்லும் முள்ளும் காடாக இருந்தது. இப்போது சுத்தமாகவும் சுகாதாரனமான முறையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்றின் காரணமாக உள்ளூர் மக்களும் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இப்போது தொற்றுகள் வெகுவாக குறைந்துள்ளதால் வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி பங்குனி பௌர்ணமி முதல் உள்ளூர் வெளியூர் என அனைத்து பக்தர்களுக்கும் கிரிவலம் சுற்ற அம்மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் உரிய பாதுகாப்பு மற்றும் பெருந்தொற்றின் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு பக்தர்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வருகின்ற சித்திரை மாதம் வரும் பௌர்ணமியில் சிறப்பு தரிசனங்கள் மற்றும் வழிபாடுகள் நடக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் முன்னரே அனுமதி அளித்தது பக்தர்களுக்கு இன்னும் மகிழ்ச்சிகரமான விடயமாக மாறியுள்ளது.