ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் 8-வது சீசனில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கேரளா பிளாஸ்டர்ஸ் அணி. ஜாம்ஷெட்பூருக்கு எதிரான போட்டியை டிரா செய்ததன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஜாம்ஷெட்பூர் எப்சியை நேற்று கோவாவில் உள்ள திலக் மைதான விளையாட்டு அரங்கில் சந்தித்தது.
ஆட்டம் ஆரம்பித்தது முதல் கேரளா அணியே அதிக ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் கேரளாவின் ஜார்ஜ் பெரேரா டியாஸ் ஒரு கோல் அடித்தார். ஆனால், அது துரதிஷ்டவசமாக ஆப்-சைடு ஆகிப்போனது. ஆனால், 17-வது நிமிடத்திலேயே கேரளாவின் அட்ரியன் லூனா கோல் அடித்து கேரளா அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்துடன் ஆடிய ஜாம்ஷெட்பூர் அணி கோல் அடிக்க கடுமையாகப் போராடியது. அதற்குப் பலனாக ஜாம்ஷெட்பூர் அணியின் நட்சத்திர வீரர் டேனியல் சிமா சக்வு 36-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆனால், ஜாம்ஷெட்பூர் அணியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அது ஆப்-சைடு ஆகிப்போனது. முதல் பாதியின் முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி ( 1-0 ) என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 49-வது நிமிடத்தில் டேனியல் சிமா சக்வு தன்னுடைய அசாத்திய திறமையான ‘ஹெட்டிங்’ மூலமாக புரோனாய் ஹால்டருக்கு பாஸ் கொடுக்க அவரும் அதை லாவகமாக கோலாக மாற்றினார். 65-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியினர் கிட்டத்தட்ட கோல்கீப்பரை ஏமாற்றி கோல் கம்பத்தை நோக்கி பந்தை அடித்து விட்ட நிலையில், இதை முன்கூட்டியே கணித்து கோல்கம்பத்தின் உள்ளாக நின்று கொண்டிருந்த ஜார்ஜ் பெரேரா டியாஸ், அந்த பந்தை தடுத்து நிறுத்தி மீண்டும் ஒருமுறை ஆட்டநாயகனாகிப் போனார். முடிவில் ஆட்டம்,( 1-1 ) என்ற கோல்கணக்கில் டிரா ஆகிப்போனது.
டார்கெட்டை நோக்கி பந்தை சரியாக அடித்தல், பாஸ் அக்யூரசி போன்றவற்றில் ஜாம்ஷெட்பூரை விட குறைவாகவும், அதிக பவுல்கள் மற்றும் 4 மஞ்சள் அட்டைகளைப் பெற்று, ஜாம்ஷெட்பூரை விட சற்று வழுவிழந்த ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தாலும் முதலாவது அரையிறுதியின் முதல் ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றிருந்த கேரளா அணி கோல் முன்னிலை அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லீக் போட்டிகளில் அதிக வெற்றி பெற்று வலுவான அணியாக அரையிறுதியில் நுழைந்த ஜாம்ஷெட்பூர் அணி இந்த போட்டியோடு வெளியேறுகிறது.
6 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டியில் நுழைந்திருக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் அந்த அணியின் பயிற்சியாளர், இவான் வுக்குமானோவிக்கே ஆவார். அவருக்கும் அணியினருக்கும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.