காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற காதல் ஜோடி கடலில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடி விபு ஷர்மா (27), சுப்ரியா துபே (26). இந்நிலையில், விபு தில்லியில் உள்ள ஒரு நிறுவனத்திலும் சுப்ரியா பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். இவர்கள் காதலிக்கும் கதை அவர்களது பெற்றோர்களுக்கு தெரியாது.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக விபு ஷர்மாவும், சுப்ரியா துபேவும் கோவாவுக்கு சென்றனர். அங்கு சென்ற அவர்கள் கோவாவில் தங்கி பல பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.
இந்நிலையில், காதலர் தினமான நேற்று நள்ளிரவு முதலே விபு ஷர்மாவும் சுப்ரியா துபேவும் கோவா பலோலம் கடற்கரையில் சுற்றித் திரிந்தனர். அப்போது எதிர்ப்பாராத விதமாக இருவரும் அலையில் சிக்கி கடலில் மூழ்கினர்.
இந்தச் சம்பவம் குறித்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், கடலில் மூழ்கிய 2 பேரையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் 2 பேரும் முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சந்தைக்கு வந்த புது ரியல்மி மொபைல்; சிறப்பம்சங்கள் என்ன?