ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி அளித்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் பதில் மனு அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கோரியும், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும், தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிடக் கோரியும் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால மனு மீது 3 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் அதிமுக வழக்கில் பழனிசாமி தரப்பின் எதிர்மனுதாரர்கள் 3 நாட்களில் பதில் அளிக்கவும், இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெற இருக்கும் சூழலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் தாக்கல் செய்திருக்கும் மனுவில், பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இடைக்கால மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் தனித் தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் எந்த தரப்பினருக்கு கிடைக்கும் என்பதில் கேள்வி எழுந்துள்ளது.
தனுஷின் ‘வாத்தி’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!