குட்கா, பான் மசாலா பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அங்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொற்று நோய் சிகிச்சை பெறுவதற்கான 3.65 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி முடிந்த பின்பு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், தமிழ்நாட்டில் குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் வாய் புற்றுநோய்க்கான முதன்மை காரணம் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் தான் என குறிப்பிட்டு கூறியுள்ளார்.
குட்கா, பான் மசாலாவை தடை செய்ய தற்போதுள்ள விதிகளில் திருத்தம் செய்யலாமா அல்லது புதிய சட்டத்தை இயற்றலாமா என்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பலிகளை மறைக்க மருத்துவர்களுக்கு சீன அரசு அழுத்தமா? – வெளிவந்த தகவல்!