கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் பங்கேற்க வந்திருந்த இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையே, இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் இந்திய மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது தொடர்பான சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையே உள்ள பாக்.நீரிணையில் உள்ள கச்சத்தீவு, இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு ஒப்பந்தமிட்டு வழங்கப்பட்டது. அதன்பின்பு, இந்திய மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிப்பதும், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வந்தன.
இந்நிலையில் வருடாவருடம் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சிறப்பு அனுமதி பெற்று பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டும் திருவிழாவின் முன்னேற்பாடாக நடைபெறும் கொடியேற்றத்தில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 76 பேர் கலந்து கொண்டனர். இலங்கை சார்பாக 88 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், நெடுந்தீவு பங்குத்தந்தை வசந்தம் மற்றும் வேர்க்காடு பங்குத்தந்தை தேவசாகயம் கலந்துகொண்டு புனித அந்தோணியார் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்தனர். அதன் பின்னர், இலங்கை எல்லையில் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, இலங்கை கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருதரப்பு மீனவர்களையும் ஒன்று திரட்டினார்.
இந்த கூட்டத்தில் பேசிய இலங்கை வடமாகாண சம்மேளனத்தின் தலைவர் அன்னராசா “தொப்புள்கொடி உறவுக்குத் தடையாக இருக்கும் கடல்வளங்களை அழிக்கும் தன்மை கொண்ட இழுவைமடி வலைத்தொழிலை விடுத்து, கடல் வளங்களுக்குத் தீங்கு விளைவிக்கா நாட்டுப்படகுகளைப் பயன்படுத்தும் பட்சத்தில் ஒப்பந்தப்படி கடன்வளங்களைப் பகிர்ந்து கொள்ள இலங்கை கடல்தொழிலாளர்கள் தயார் ” என தெரிவித்தார்.
இதனை ஒப்புக்கொண்ட கொண்ட இந்திய மீனவர்கள் விரைவில் மாற்றுத்தொழில் முறைக்கு மாறுவதாகவும், அதற்கு சிறிது காலஅவகாசமும் கேட்டனர். மேலும், இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை கடந்த 2004ல் இருந்து பேச்சுவார்த்தையில் மட்டுமே இருப்பதாகவும் அதற்கு விரைவில் தீர்வு வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவது தங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
அப்பொழுது பேசிய இலங்கை வடமாகாண கடல்தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் அன்னராசா, இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் குடும்பத்துக்கு பணஉதவி செய்யவே படகுகளை விற்றதாகவும், தங்களின் அழுத்தத்தின் பெயரிலேயே படகுகள் விற்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் விரைவில் இலங்கை வர இருப்பதாகவும் அப்பொழுது இதனைப் பற்றிப்பேசி இருதரப்புக்கும் சுமுகமான முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் ஜேசுராஜா, இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் எடுத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் வரும் மே மாதத்தில் கொழும்பில் இதுகுறித்து தீர்வுகாணும் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.