ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் கடந்த மார்ச் 4ல் தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உட்பட இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் ஒவ்வொரு அணியும் ரவுண்ட் ராபின் முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை என 7 போட்டிகளில் விளையாட வேண்டும்.
முதல் போட்டியில் பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 2வது போட்டியில் நியூஸிலாந்திடம் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து 3வது போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை செடன் பார்க் மைதானத்தில் சந்தித்தது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிரிதி மந்தனாவும், யஸ்திகா பாட்டியாவும் களமிறங்கிறனர். அணியின் ஸ்கோர் 49ஐ எட்டிய நிலையில் யஸ்திகா 31 ரன்களில் ஷகீரா செல்மானின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மிதாலி ராஜும் 5 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த தீப்தி சர்மாவும் 15 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் நிலைத்துநின்று ஆடிய ஸ்ம்ரிதி மந்தனாவுடன் அணியின் ஸ்கோர் 78ஐ எட்டியபோது 4வது விக்கெட்டுக்கு கைகோர்த்தார் ஹர்மன்பிரீத் கவுர். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
ஒருநாள் போட்டிகளில் தனது 5வது சதத்தைப் பூர்த்தி செய்த ஸ்ம்ரிதி மந்தனா அணியின் ஸ்கோர் 262 ரன்களை எட்டியபோது ஆட்டமிழந்தார். தனிநபராக 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 123 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது. 4வது விக்கெட்டுக்கு ஸ்ம்ரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் இணை 184 ரன்களைக் குவித்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்தவர்கள் பெரிய அளவில் ரன்களைக் குவிக்காத நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் தன்னையுடைய சதத்தைப் பதிவு செய்தார். 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 317 ரன்களைக் குவித்தது. ஹர்மன்பிரீத் கவுர் 10 பவுண்டரிகள், 2 சிஸ்சர்களுடன் 109 ரன்களைக் குவித்தார். பவுலிங்கில் வெஸ்ட் இண்டிஸின் அனிஷா மொஹம்மது 2 விக்கெட்டுகளும், ஷமிலியா கொன்னேல், ஹெய்லி மேத்யூஸ், ஷகீரா செல்மான், டியான்ரா டோட்டின் மற்றும் ஆலியா அல்லைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்ததாக, 318 என்ற கடின இலக்கை நோக்கி சேஸ் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, அதன் தொடக்க ஆட்டக்காரர்களான டியான்ரா டோட்டின் மற்றும் ஹெய்லி மேத்யூஸ் இணை அற்புதமான தொடக்கத்தைத் தந்தது. டியான்ரா டோட்டின் அரைசதமடித்து அணியின் ரன்வேகத்தை அதிகரித்தார். அணியின் ஸ்கோர் 100ஐ எட்டியபோது சினேகா ராணாவின் பந்துவீச்சில் மேக்னா சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டியான்ரா டோட்டின். அதன்பின்பு, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியாக 40.3 ஓவரில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது.
இந்தியா சார்பாக சினேகா ராணா 3 விக்கெட்டுகளும், மேக்னா சிங் 2 விக்கெட்களும், ஜுலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரேகர், ராஜேஸ்வரி கெய்க்வாட் தல 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் தனது 3வது போட்டியில் வெஸ்ட் இண்டீசை 155 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. 123 ரன்கள் குவித்த இந்திய அணியின் ஸ்ம்ரிதி மந்தனா ஆட்டநாயகி விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம், 4 புள்ளிகளுடன் இந்தியஅணி புள்ளிபட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. இந்தியஅணி தன்னுடைய அடுத்த போட்டியாக இங்கிலாந்து அணியை வரும் மார்ச் 16ஆம் தேதி எதிர்கொள்கிறது.