வேலூர் நற்பணி இயக்க அலுவலகத்தில் இருந்து துணிவு திரைப்படத்தின் 900 டிக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துணிவு திரைப்படம் நாளை அதிகாலை வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்குவதில் போட்டி போட்டு வருகின்றனர். பல திரையரங்குகளில் முதல் நாள் முதல் ஷோவுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. மேலும் அஜித் ரசிகர் மன்ற டிக்கெட்டுகளை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வேலூர் காகிதப்பட்டறையில் அஜித் தலைமை நற்பணி இயக்க அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நற்பணி இயக்கத்தின் தலைவராக சுரேஷ்குமார் என்பவரும், சண்முகம் என்பவர் செயலாராகவும் இயங்கி வருகின்றனர். இந்நிலையில் இங்கு துணிவு திரைப்படத்தின் ரசிகர் மன்ற டிக்கெட்டுகள் கடந்த 2 நாட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே, நேற்று இரவு அலுவலகத்தை பூட்டி சென்றுள்ளனர். மறுநாளான இன்று அலுவலகத்தை திறந்து பார்த்தபொழுது, அலுவலகத்தின் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து சுரேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது உள்ளே சென்று பார்த்தபொழுது, அலுவலக மேசையில் வைக்கப்பட்ட 900 டிக்கெட்டுகள் மற்றும் 16 ஆயிரம் ரூபாய் பணமும் களவு போனது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுரேஷ் குமார் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் டிக்கெட்டுகள் களவு போன சம்பவம் அஜித் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வார நாட்கள் உங்களுக்கு பலன் கொடுக்குமா? மேஷம் முதல் கன்னி வரை