மகாகவி பாரதியாரின் பேத்தியான லலிதா பாரதி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாரதியாரின் மூத்த மகளான தங்கம்மாவின் மகளான லலிதா பாரதி இசையை முறையாக கற்றுக்கொண்டு பாரதியாரின் பாடல்களை இசை வடிவமாக பரப்பும் தமிழ்ப்பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று இயற்கை எய்தினார். இவரின் உடலுக்கு பொதுமக்களும் திரை பிரபலங்களும், எழுத்தாளர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாரதியாரின் பேத்தியான லலிதா பாரதியின் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள் வழி பேத்தி லலிதா பாரதி அம்மையார் (94) வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.
மகாகவி பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாளின் மகளான லலிதா பாரதி அவர்கள் 40 ஆண்டுகளாக இசையாசிரியராகப் பணியாற்றிவர் என்பதோடு, பாரதியாரின் பாடல்களை இசைவடிவில் பரப்பும் தமிழ்ப்பணியிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைசிறந்த தமிழ்க்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லலிதா பாரதி அவர்களின் மறைவால் வாடும் அவர்தம் உறவினர்கள், தமிழார்வலர்கள் உள்ளிட்டோர்க்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தியும் கவிஞருமான லலிதா பாரதி அம்மையார் முதுமை காரணமாக காலமானார் என்பதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மகாகவி பாரதியாரின் கவிதைகளை இசை மற்றும் நூல் வடிவில் நமக்கு வழங்கிய, மகாகவியின் மகள் வழி பேத்தியான திருமதி லலிதாம்பாள் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
ஆசிய அளவிலான போட்டியில் வென்ற காஞ்சிபுர மாணவர்கள்; பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!