மக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட பாரை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வையாபுரி தலைமையில் மக்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முத்தியால் பேட்டை பகுதியில் அரசு அனுமதியுடன் தனியார் நிறுவனம் ஒன்று ரெஸ்டோ பாரைத் துவங்க இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, அந்த பார் திறப்புக்கான முன்னெடுப்புகள் நிகழ்ந்தன.
இதை எதிர்த்து, கடந்த சில நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் இப்பகுதியில் ரெஸ்டோ பார் வந்தால், அப்பகுதி பெண்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், எதிர்ப்பை மீறி நேற்று ரெஸ்டோ பார் திறக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த பலரும், பாருக்கு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பாரின் உள்ளே பாடல்கள் ஒலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட ரெஸ்டோ பார் உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாரின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, திடீரென பெண்கள் மற்றும் ஆண்கள் பாருக்குள் புகுந்து அங்கிருந்த சேர், கண்ணாடி மற்றும் பொருள்களை உடைத்து எறிந்தனர். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
ஆனால், அவர்கள் முன்னிலையிலும் பொதுமக்கள் அங்குள்ள அனைத்து பொருட்களை அடித்து நொறுக்கி, உடனடியாக அப்பகுதியில் இருந்து பாரை அகற்ற வேண்டும் என ஆவேசமாக கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தினர். இதன்பின்னர் காவல்துறையினர் உயர் அதிகாரியிடம் பேசி இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்ட பார் மூடப்பட்டது. தற்போது காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு பாரை அடித்து உடைத்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ஆர் நினைவு தினம்; மரியாதை செலுத்திய புதுச்சேரி முதல்வர்..