இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், மிர்பூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து வங்கதேச அணி பேட்டிங்கில் களமிறங்கியது.
இதைத்தொடர்ந்து, வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்பின்னர், இந்திய அணியினர் பேட்டிங்கில் களமிறங்கினர். முதல் நாள் முடிவில் இந்திய அணி,விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 14, ராகுல் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதன்பின்பு, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆட்டம் தொடக்கம் முதலே இந்திய அணி தடுமாற ஆரம்பித்தது. இந்திய வீரர்களின் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருக்க, ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இணை இந்திய அணியை மீட்டெடுத்தது.
ரிஷப் பண்ட் 93 ரன்களில் சதத்தை தவறவிட, ஷ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
மொத்தத்தில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, வங்கதேச அணி களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் விக்கெட் ஏதும் இழப்பின்றி அந்த அணி 7 ரன்களை எடுத்துள்ளது. தற்போது, நஜ்முல் மற்றும் ஷகிர் களத்தில் உள்ளனர்.
நெட்ஃபிளிக்ஸ் பயனர்களுக்கு அதிர்ச்சி.. காரணம் என்ன?