தமிழக அரசு பள்ளிகளில் இன்று முதல் கலைத் திருவிழா தொடங்குகிறது.
அரசு பள்ளி மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொணரும் வகையில் அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று முதல் ஓவியம், கவிதை, கட்டுரை, நடனம், பல குரல் பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10 வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் என நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் என தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த போட்டிகளில் பள்ளி அளவில் இன்று முதல் வருகிற 28 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் வட்டார அளவில் வருகிற 29 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் பங்கு கொள்வர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாவட்ட அளவில் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் பங்கு கொள்வர்.
இதையடுத்து மாநில அளவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
குறும்படத் திருவிழா நடத்தி அசத்தும் இந்திய ராணுவம்! எதற்கு தெரியுமா?