கார்த்திகை தீபத்திருநாள் அன்று மகாதீபத்தின்போது மலையின் மீது ஏற 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கார்த்திகை தீப ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை காண லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் செல்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் நவம்பர் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் 6 ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோயிலில் பரணி தீபமும், கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையாரின் மலை மீது மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும்.
லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவைகளை ஏற்படுத்தித்தரும் வகையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர், ‘கார்த்திகை தீபத்திருநாள் அன்று மகாதீபத்தின்போது மலையின் மீது ஏற 2 ஆயிரம் நபர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் மேலும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை கொண்டு பக்தர்களிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்து அதற்கு பதிலாக மஞ்சப்பை தர வேண்டும்’ என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொடநாடு கொலை வழக்கில் அடுத்த கட்டம் ? நேபாளம் விரைகிறார்கள் சிபிசிஐடி போலீசார்