நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பக்தர்களுக்கு திருப்பதியில் மீண்டும் சர்வ தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நேற்று தெரிவித்தார்.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் அவர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது:
திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி முதல் திருப்பதியில் 3 இடங்களில் வழங்கப்பட்டு வந்த சர்வ தரிசன டோக்கன்களை சில காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தியது.
பின்னர், டோக்கன்கள் வழங்கப்படும் இடங்களில் பக்தர்களுக்கு தேவையான சில அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதையடுத்து, மீண்டும் டோக்கன் வழங்க தேவஸ்தான அறங்காவலர் குழு அனுமதி வழங்கியது. அதனால், நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், நிவாசம் தங்கும் விடுதி மற்றும் ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜ சுவாமி 2-வது சத்திரம் ஆகிய 3 இடங்களில் சோதனை அடிப்படையில் பக்தர்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும்.
சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் தினமும் 20 ஆயிரம் டோக்கன்கள் வீதமும், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தினமும் 15 ஆயிரம் டோக்கன்கள் வீதமும் விநியோகம் செய்யப்பட உள்ளது.
பக்தர்களின் கூட்டத்தை பொறுத்து இதனை குறைக்கவோ அல்லது கூட்டவோ செய்யப்படும். ஒருவேளை இந்த சர்வ தரிசன டோக்கன்கள் தீர்ந்து விட்டால், பக்தர்கள் நேரடியாக திருமலையில் உள்ள வைகுண்டம் 2-வது காம்ப்ளக்ஸ் வழியாக சென்று சுவாமியை தர்ம தரிசனம் வாயிலாக தரிசிக்கலாம். இதனால் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறையும்.
இதேபோன்று, வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் தினமும் காலை 8 மணிக்கு விஐபி பிரேக் தரிசனம் சோதனை அடிப்படையில் அமல் படுத்தப்படும். இதன் மூலம் காலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘சமூகவலைதளங்களை நம்பாதீர்கள்!’ – குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் குறித்து வெளிவந்த முக்கிய அறிவிப்பு…