கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக கிருஷ்ணதாபா என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடியினர் நேபாளம் செல்லவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை நடைபெற்றது. அப்போது, ஒரு கும்பல் இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் என்பவரை கொலை செய்தது. மேலும், எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்து சென்றது.
இந்த வழக்கில், சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த வழக்கு முன்னே நகராத நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கை மறு விசாரணை செய்ய காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கொடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆதலால், தற்போது சிபிசிஐடி கொடநாடு வழக்கில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணதாபா என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடியினர் நேபாளம் செல்லவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஓம் பகதூர் கொலை செய்யப்பட்ட நாளில், கிருஷ்ணதாபாவும் காவல் பணியில் இருந்தார். தற்போது இவர் தனது குடும்பத்துடன் நேபாளத்தில் வசித்து வருவதால், அவரிடம் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடியினர் நேபாளம் செல்லவுள்ளனர்.
இதையும் படிங்க: ‘சமூகவலைதளங்களை நம்பாதீர்கள்!’ – குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் குறித்து வெளிவந்த முக்கிய அறிவிப்பு…