நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை கிளைகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சுதந்திர உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தொலைநோக்கு திட்டம் 2047-ஐ அமல்படுத்துவது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு நேற்று தொடங்கியது. ஹரியானாவின் சூரஜ்கண்டில் இந்த மாநாட்டை தொடங்கி வைத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
தீவிரவாதத்தை முற்றாக எதிர்க்கும் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பின்பற்றி வருகிறது. இதற்காக, என்.ஐ.ஏ உள்ளிட்ட நாட்டின் புலன் விசாரணை அமைப்புகளை வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தீவிரவாத தடுப்புக்கான வலிமையான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ கிளைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் முன் உள்ள அனைத்து சவால்களுக்கும் தீர்வு காண்பதற்கான வழிகாட்டுதலை இந்த சிந்தனை முகாம் வழங்கும்.
ஒரு காலத்தில் இடதுசாரி தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள், ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக இருந்து வந்தன. இருப்பினும், இந்த பகுதிகள் தற்போது வளர்ச்சிக்கான பகுதிகளாக மாற்றம் பெற்றுள்ளன. இணைய குற்றங்கள் தற்போது நாட்டிற்கும் உலகிற்கும் முக்கிய சவாலாக விளங்குகிறது. இதற்கு எதிரான யுத்தத்தை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, கூட்டு செயல்பாடு என்பதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. முழுமையான அரசு, டீம் இந்தியா எனும் அணுகுமுறையின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டையும் நமது இளைஞர்களையும் போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாக்க மத்திய அரசு உறுதியாக உள்ளது. ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அரசின் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது.
சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. ஆனால், குற்றங்கள் மாநில எல்லைகளுக்கு உட்பட்டவையாக இருப்பதில்லை. எனவே, எல்லை கடந்த குற்றங்களை எதிர்கொள்வதற்கான திட்டத்தை மாநிலங்கள் கலந்து ஆலோசித்து வகுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இதையும் படிங்க:இன்னும் சலிக்காத விக்ரம் திரைப்படம்…கமல்ஹாசன் செய்யப்போகும் அடுத்த பிரம்மாண்டம்?