இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மூண்டுள்ள நிலையில், உலக நாடுகள் அனைத்தும் இப்போரை எப்படி நிறுத்துவது என ஆலோசித்து வருகின்றனர். எவ்வளவு ஆலோசித்தும் இதுவரையிலும் இப்போருக்கு தீர்வு எட்டப்பபடாத நிலையே நீடித்து வருகிறது. இருப்பினும் பல உலக நாடுகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்கு வாருங்கள் என்றும், போர் வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர்.
உயிர் பலி, மக்கள் புலம்பெயர்தல் என பலதரப்பட்ட இழப்புகளோடு போர் நடைபெற்று வருகிறது. ஐந்து நாட்கள் ஆன நிலையில் இன்றும் போர் வீரியம் குறையாமல் நடந்து வருகிறது. உக்ரைன் பெரிதும் நம்பியிருந்த அமெரிக்கா, உக்ரைனுக்கு ஆயுத உதவியோ, தன் படைகளின் மூலம் உதவியோ செய்யவில்லை. அமெரிக்காவின் இந்த நிலை உக்ரைனுக்கு மட்டும் அல்ல, உலக நாடுகள் அனைத்திற்கும் அதிர்ச்சியாக அமைந்தது.
இப்படியான சூழலில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் இப்போர் பற்றி கூறுகையில், நான் அமெரிக்காவின் அதிபராக இருந்திருந்தால் இரஷ்யா – உக்ரைனுக்கு இடையே இப்படியான நெருக்கடி நிலை எழுந்திருக்காது என்றார். மேலும், டிரம்ப் அவர்கள் தற்போது பிரச்சினை இரஷ்ய அதிபர் புதின் புத்திசாலி என்பதல்ல, அவர் புத்திசாலிதான். உண்மையான பிரச்சினை தற்போது என்னவெனில் நம் தலைவர்கள் பேசாமல் ஊமையாக இருப்பதே என்றார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் இக்கருத்து உலகளவில் பேசப்பட்டு வருகிறது. தற்போதைய அமெரிக்காவின் அதிபராக இருக்கும் ஜோ பைடன் அவர்களையே இக்கருத்து சாடுவதாக பலரும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.