சின்னத்திரை நடிகை திவ்யா, தனது காதல் கணவர் மீது காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில், அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘செவ்வந்தி’ தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கர்நாடகத்தை சேர்ந்தவர். ‘கேளடி கண்மணி’ என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். பிரபல தொடரான மகராசியில் இவர் நடித்திருந்தார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த நைனா முகமத் என்பவர் ‘அர்னவ்’ என்ற பெயரில் தற்போது ‘செல்லம்மா’ என்கிற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், திவ்யாவுக்கு அர்னவ்வுடன் கடந்த 2017 ஆம் ஆண்டில் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு, இவர்கள் இருவரும் லிவ்-இன்னில் வாழ்ந்து வந்தனர். பின், திவ்யாவின் கட்டயாத்தின் பேரில், இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படிங்க:ஈபிஎஸ் ஆதரவாளருக்கு நெருக்கடி! லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம்
இதைத்தொடர்ந்து, தற்போது கணவர் தன்னை துன்புறுத்துவதாக திவ்யா இரண்டு காணொளிகளை வெளியிட்டார். அதில், தனது கணவர் அர்னவ் அடித்து தன்னை துன்புறுத்துவதாகவும், இதனால் தனது கருக்கலையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பரபரப்பு குற்றம் சாட்டினார்.
பதிலுக்கு அரனவ், மனைவி திவ்யா மீது தனது தரப்பு நியாயங்களை கூறி பல புகார்களை அடுக்கி வருகிறார். இந்நிலையில், திவ்யா அளித்த புகாரின் பேரில் நடிகர் அர்னவ்வுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அந்த சம்மனில் ,நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று போரூர் அனைத்து மகளிர் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் அர்னவ் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.