எப்போதுமே பாடலினூடே பலவற்றை உட்புகுத்த முடியும். கற்பனைகளை பாடலில் புகுத்தி பாடலாசிரியர்கள் விளையாடுவதும் அதில் மயங்கி, வியந்து ரசிகர்கள் திகைப்பதும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்துவருகிறது.
பாடலினூடே சமூகத்தை, நிலப்பரப்பை வெளிப்படுத்திய பாடலாசிரியர்கள் பலர். ஆனால், பாடலின் வழியே அறிவியலை வெளிப்படுத்தியவர்களின் பட்டியல் மிகவும் குறைவே. தற்போதைய காலக்கட்டத்தில் பாடலில் அறிவியலை புகுத்துவதை மிகவும் சிறப்பாக செய்பவர், மதன் கார்க்கி. அவரின் பல பாடல்களில் அறிவியல் இழைந்திருப்பதை நாம் காணலாம்.
ராஜமௌலி இயக்கிய ‘நான் ஈ’ திரைப்படத்தில் கதாநாயகி பிந்து சிறுசிறு பொருட்களில் நுண் சிலைகளை வடிவமைப்பவள். திடீரென ஒருநாள் அவளை காதலிக்கும் நானி ‘என் இதயக் கூட்டிலே உன் இதயம் கோர்க்க வா! ஈருயிரை சேர்க்க வா! ஒன்றாகிட வா’ என்று காதல் பித்தில் பிந்துவை நோக்கி பாடுகிறான். இதைக் கேட்ட பிந்துவுக்கு யோசனை ஒன்று வர ஓடோடி பென்சிலை எடுத்து, ஒரு சிலை வடிக்க தயாராகிறாள்.
பிந்து தனது அறையில் அமர்ந்து கொண்டு சிலை வடிக்க, அதை நானி எதிர் கட்டிடத்தில் இருந்து பார்க்கிறான். அப்போது, எதிர்பாரா விதமாக மின்சாரம் நின்றுவிடுகிறது. பிந்து சலிப்படைகிறாள். உடனே, சிலவற்றை செய்து நானி அவளுக்கு மட்டும் ஒளி தருகிறான்.
அப்போது, ‘வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்….பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்’ என காதல் ஒளியை பாடியபடியே நானி பாய்ச்சுகிறான். மேலும், ‘நுண்சிலை செய்திடும் பொன் சிலையே, பென்சிலை சீவிடும் பெண் சிலையே, என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா?’ என வரிகளில் கவிதை சந்தத்தை கூட்டி நானியின் காதல் சந்தத்தையும் கூட்டுகிறார், பாடலாசிரியர் மதன் கார்க்கி.
ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?
உன் பூதக் கண்ணாடி
தேவையில்லை
என் காதல் நீ பார்க்க
கண் போதுமே
நுண்சிலைகளை செய்யும் செயல்களில் பிந்து ஈடுபடுவதால் பூதக்கண்ணாடி என்பது அவளுக்கு மிகவும் அத்தியாவசியமானது. அதை தன் பாடலில் மதன் கார்க்கி சேர்க்கும் விதம் கொள்ளையழுகு. அதாவது, ‘பூதக்கண்ணாடி கொண்டு உன் நுண்சிலைகளை கூர்ந்து கூர்ந்து பார்க்கும்படியெல்லாம் இல்லை. உன் கண்களை திறந்து என்னைப் பார்த்தாலே போதும். என் காதல் உனக்கு தெரியும்’ என்பது பாடலில் ஏக்கமாக, காதலாக வழிந்தோடுகிறது.
முத்தங்கள் தழுவல்கள்
தேவையில்லை
நீ பார்க்கும் நிமிடங்கள்
அது போதுமே
கோபம், ஏக்கம், காமம், வெட்கம்
ஏதோ ஒன்றில் பாரடி…
முத்தங்கள் மற்றும் தழுவல்களை விடவும் நீ பார்க்கும் நிமிடங்களே போதும் என்கிறான். ஆகவே, தயவுசெய்து என்னைப் பார்த்துவிடு, கோபம், ஏக்கம், காமம், வெட்கம் என ஏதோ ஒன்றிலேனும் என்னைப் பார்த்துவிடு என நானியின் ஏக்கத்தை பாடலாசிரியர் மதன் கார்க்கி சுருங்கவும், தெளிவாகவும் சொல்லுகிறார்.
இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே விருது யாருக்கு? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு