தமிழகத்தில் நாளை தொடங்கவிருந்த இளங்கலை பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது மற்றும் அவற்றை உறுதி செய்வதற்கான இணையவழி கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், கலந்தாய்வின் முதல் கட்டமாக ஆகஸ்ட் 20 முதல் 23-ம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிலையில், ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கி அக்டோபர் 23-ம் வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெற ஒருநாள் மட்டுமே இருக்கும் சூழலில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடுவதில் தாமதமாகியுள்ளதால், மாணவர்களின் நலன் கருதி பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. நீட் முடிவுகள் வெளியாகி இரண்டு நாள்களில் பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.