குற்றாலம் சாரல் திருவிழாவின் நிறைவு நாளான இன்று (ஆகஸ்ட் 12) பழமை வாய்த்த கார்களின் கண்காட்சி மற்றும் அணிவகுப்பு நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.
தினமும் குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மலர் மற்றும் பழக்கண்காட்சி, நாய் கண்காட்சி, கோலப்போட்டி, கொழு கொழு குழந்தை போட்டி, ஆணழகன் போட்டி, படகு போட்டி, யோகா போட்டி ஆகியனவும் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 11) இரவு மதுரை முத்து குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, நிறைவு நாளான இன்று (ஆகஸ்ட் 12) குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் உள்ள ஜமீன் பங்களா வளாகத்தில் பழமை வாய்ந்த கார்களின் கண்காட்சி நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியில் 33 பழமை வாய்ந்த கார்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் அவற்றின் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பினை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
குற்றாலம் சாரல் திருவிழா நிறைவு நாள் விழா இன்று (ஆகஸ்ட் 12) மாலை 05.30 மணி அளவில், தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.