இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கு மேல் குறைந்து வருவதால் மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஓயவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ், பல்வேறு திரிபுகளாக உயிர்கொல்லி நோயாக உருவெடுத்தது. இதனால் மத்திய அரசும் மாநில அரசும் மக்களிடையே பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வந்தன. பொது மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவேளையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றது. மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசிகளை 2 டோஸ்களாக மக்களுக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 44,877 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று 34,113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று எண்ணிக்கை 30,000 கீழ் குறைந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 5,09,558 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 347 பேர் இந்த கொடிய நோயால் இறந்துள்ளனர்.
அதேபோல ஒரே நாளில் கொரோனா நோயிலிருந்து 82,817 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையாக 4,17,60,458 பேர் உள்ளனர். தற்போது கொரோனாவாக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,23,127 ஆக குறைந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 2.23% என்றிருந்த நிலையில் இதுவரை 173.42 கோடி பேர் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளிலிருந்து படிப்படியாக தளர்வுகள் நடைபெற்றுவருகின்றன. விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிக் கல்லூரிகள் தொடங்கி நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து அலுவலகங்களும் இயல்பாக செயல்பட்டு வருகின்றது. மக்கள் பயன்படுத்தக்கூடிய தியேட்டர் , மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் என அனைத்தும் திறக்கப்பட்டன.