கொரோனா நம் வாழ்வுக்கு வந்த பிறகு, நம்மின் பல கனவுகள் கேள்விக்குறி ஆகின. நம்மின் பல திட்டங்கள் தளர்ந்து போயின. வாழ்வு குறித்தான புரிதல்கள் மாறிப்போயின.
கொரோனாவிற்கு முந்தைய வாழ்வு பிந்தைய வாழ்வு என இருவேறாக நம் வாழ்வை நம்மால் தற்போது பிரிக்க இயலும். கொரோனா காலத்தில் நாம் கடந்த துயரங்களின் அளவு மிகப்பெரியது. மேலும், கொரோனவினால் ஏற்பட்ட துயரங்களுக்கு மிக முக்கிய அடிப்படை காரணமாக அமைந்தது, வேலை இழப்புதான்!
தற்போது கொரோனா காலக்கட்டத்தில் நேர்ந்த வேலை இழப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் வெளிவந்துள்ளது. அப்புள்ளி விவரங்களை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அப்புள்ளி விவரத்தின் படி, கொரோனா முதல் முழு ஊரடங்கின்போது 3 மாதத்தில் 23 லட்சம் பேர் தங்களின் வேலையை இழந்துள்ளனர். இதில் 16 லட்சம் பேர் ஆண்கள். 7 லட்சம் பெண்கள் வேலையை பறி கொடுத்துள்ளனர்..
மேலும், உற்பத்தி, கட்டுமானம், சுகாதாரம், கல்வி, வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட 9 துறைகளின் புள்ளி விவரங்களில் இருந்து வெளிவந்த புள்ளி விவரங்களில், இந்த 9 துறைகளில் 25 மார்ச் 2020 முன்பு அதாவது முதல் முழு ஊரடங்குக்கு முன்பு, ஆண் ஊழியர்களின் எண்ணிக்கை 2.17 கோடியாக இருந்தது. ஜூலை 1-ந் தேதி 2.01 கோடியாக குறைந்துள்ளது. பெண் ஊழியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7 லட்சம் குறைந்து 90 லட் சத்தில் இருந்து 83.3 லட்சமாக இருக்கிறது என்றும் அந்த விவரங்களில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.