கொடநாடு கொலை வழக்கில் தொழிலதிபர் செந்தில்குமாரிடம் தனிப்படை காவல்துறை 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை நடைபெற்றது. அப்போது, ஒரு கும்பல் இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் என்பவரை கொலை செய்தது. மேலும், எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்து சென்றது.
இந்த வழக்கில், சயான் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடந்த சில நாள்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மகனும், தொழிலதிபருமான செந்தில்குமாரை நேரில் ஆஜராகும்படி தனிப்படை காவல்துறை சம்மன் அனுப்பியது.
அதன்படி கோவை காவல்துறைப் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள விசாரணைப் பிரிவு அலுவலகத்தில், தொழிலதிபர் செந்தில்குமார் ஜூலை 8-ம் தேதி நேரில் ஆஜாரானார்.
அவரிடம் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொடநாடு எஸ்டேட்டில் மாயமான ஆவணங்கள், அவரது வீட்டில் கண்டறியப்பட்டது எப்படி என்பது தொடர்பாக இன்று கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகளில் வேலைவாய்ப்புக்கான பதிவு ரத்து- தமிழக அரசு