தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுகவினர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில வாரங்களாவே தீவிரமான நிலையில், கடந்த பொதுக்குழுவில் சரியான தீர்வுகள் எட்டப்படவில்லை. இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இடைத்தேர்தலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் படிவத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திடாததால், அதிமுக வேட்பாளர்களுக்கு அதிமுக இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று (புதன்கிழமை) எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தில், அதிமுக வேட்பாளர்களுக்கான படிவங்களில் இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்குள்ளாக, இருவரும் கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
தொடர்ந்து, அந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக, தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், இரட்டை இலை சின்னம் அதிமுக வேட்பாளர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் காலிப் பதிவியிடங்களுக்கு அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ராக்கெட் வேகத்தில் அரிசியின் விலை! சமாளிப்பார்களா சாமானியர்கள்?