உலக நாடு முழுவதும் தங்கத்தை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் பழைய தங்கத்தை மாற்றி புதிய நகை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதால் பழைய தங்க ஆபரணங்களை மறுசுழற்சி செய்வது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உலக தங்க கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியீட்டு உள்ளது . அதில், கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் 75 டன் தங்கத்தை இந்திய மறுசுழற்சி செய்து உள்ளது. சர்வதேச நாடுகளிடம் ஒப்பிடும் போது சீனா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களிலும், இந்தியா 4 வது இடத்தில் உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நாட்டில் தற்போது 35 நிறுவனம் தங்கத்தை மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நிறுவனங்களின் ஒட்டுமொத்த திறம் 1800 டன்னாக உள்ளது. இருப்பினும் தங்க மறு சுழற்சியில் நாட்டின் முழுத்திறன் இன்னும் பயன்படுத்தவில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து உலக தங்க கவுன்சிலின இந்திய பிராந்திய நிர்வாக அதிகாரியான பி.ஆர்.சோமசுந்தரம் கூறியது, “தங்கம் மறு சுழற்சியில் உலக நாடுகளுடன் போட்டியிடும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. அதற்கு அரசு முறையான கொள்கைகளை வகுத்து சில சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும், நாட்டில் தங்கம் மறுசுழற்சி தொழிலானது முறைப்படுத்தப்படாமல் உள்ளது. அதை முறைப்படுத்த நடவடிக்கை அரசு மேற்கொண்டால், தங்கம் மறுசுழற்சி துறை வளர்ச்சி அடையும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தங்க விநியோகத்தில் 11 சதவீதம் பழைய தங்கத்தில் இருந்து வந்தது என்றும் தங்கத்தின் விலை மற்றும் எதிர்கால தங்கத்தின் விலை ஆகிய எதிர்பார்ப்பு காரணமாக தங்கம் மறுசுழற்சி செய்யப்படுகிறது என்றும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி தங்கத்தை மறுசுழற்சி அதாவது நகைகள் அல்லது வேறு வகைகளில் மாற்றுவது என்பது அதிகம் நடந்து வருவதாகவும் இதற்கு எதிர்கால எதிர்பார்ப்புகள் மற்றும் பொருளாதார பின்னணி ஆகியவையே காரணம் என்றும் தெரிவித்துள்ளது. பொருளாதாரம் மிகப்பெரிய சிக்கலில் இருக்கும் போது, குறிப்பாக கோவிட் சமயத்தில் ஒவ்வொரு பொது மக்களுக்கும் உதவி செய்தது அவர்கள் சேமித்து வைத்த தங்கம் தான் என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஆச்சர்யமூட்டும் உலகின் அதிசய இடங்கள்: தெரிந்து கொள்ளுங்கள்!