பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் எனப்படும் பகுதியில் கால்நடை மருத்துவராய்ப் பணிபுரிந்த சத்யம் குமார் என்பவரைக் கடத்திச் சென்று திருமணம் செய்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரவு பன்னிரண்டு மணிக்கு தங்களது வீட்டில் இருக்கும் கால்நடைக்கு உடல்நிலை சரி இல்லை என்று வந்த அழைப்பினையடுத்து, அருகில் இருந்த கிராமத்திற்குச் சென்ற சத்யம் குமார், கால்நடைகள் ஏதும் இல்லாதது கண்டு திகைத்த தருணத்தில் அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளது.
நெடுநேரம் ஆகியும் வீட்டிற்கு சத்யம் குமார் வராததினைக் கண்டு அவரது பெற்றோர்கள் சந்தேகமடைந்திருந்த நிலையில், அவர்களது கைப்பேசிக்கு ஒரு காணொளி வந்திருந்தது.
அந்த காணொளியில் சத்யம் குமார், ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து காவல் நிலையத்திற்கு விரைந்த பெற்றோர்கள் தங்களது மகன் காணாமல் போயுள்ளதாகவும், அவரை யாரோ கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளதாகவும் புகாரளித்தனர்.
இந்த புகாரினையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல் துறையானது இது வரை எந்த முன்னேற்றத்தினையும் கண்டறிய முடியாத நிலையில் உள்ளது.
மேலும், சத்யம் குமார் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டாரா அல்லது அவரது சொந்த விருப்பத்திற்கிணங்கவே இந்த திருமணம் நடந்ததா என்பது பற்றிய விசாரணையினை காவல்துறை நடத்திவருகிறது.
சத்யம் குமரினை அவரது பெற்றோர்கள் தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனர். காவலர்களும் கடத்தியவர்கள் இருக்குமிடம் கண்டறிய முயன்று வருகின்றனர்.
இது பற்றி பெகுசராய் சுப்பரின்டென்டென்ட் யோகேந்திர குமார், ‘பகட்வா எனப்படும் இந்த திருமண முறையானது பீகார் பகுதிகளில் 1970ம் ஆண்டுகளில் இருந்தே நடைமுறையில் உள்ளது. கால்நடை மருத்துவரைக் கடத்திச் சென்ற குடும்பத்தினை பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கு பற்றி விசாரிக்க உள்ளோம்.’ என்று கூறியுள்ளார்.
கட்டாயத் திருமணங்கள் பீகாரின் பல பகுதிகளில் சாதாரணமாக நடைபெறுகின்றன. சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் இளைஞர்கள் கடத்தப்பட்டு வன்முறையாக திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். வரதட்சிணை கொடுக்க முடியாத குடும்பத்தினரில் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க இவர்கள் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
திறக்க வேண்டாம் என்று எழுதப்பட்ட கல்லறை கண்டுபிடிப்பு.. சபிக்கப்பட்ட கல்லறையா?