தெற்கு ஈரானியப் பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் இதுவரை மூன்று பேர் இறந்துள்ளதாகவும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளியானது ஹார்மோஸ்கன் பகுதியிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து பத்து கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஈரான் நாட்டின் பல பகுதிகளிலும் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. பஹ்ரைன், கத்தார் மற்றும் அரேபிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அரேபியப் பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவுகளை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Just experienced the mother of all earthquakes and it was one of the longest ones in my 20 years of living in UAE and a really strong one here in Dubai…. #Dubai #earthquake #uae praying for everyone’s safety. May Allah have mercy. pic.twitter.com/iCELmDggIZ
— Fakhr-e-Alam (@falamb3) July 1, 2022
தொடர் நிலநடுக்கங்கள்:
இன்று அதிகாலை 3:25 மணிக்கு உருவான இந்த நிலநடுக்கத்துக்கு முன்னால் 2:43க்கு ஒரு நிலநடுக்கமும், 3:13க்கு ஒரு நிலநடுக்கமும் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இவைகள் முறையே 4.6 மற்றும் 4.4ஆகப் பதிவாகியுள்ளன.
இந்த பகுதியில் கடந்த வாரமும் 5.6 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஒன்று உருவாகியிருந்தது. ஈரானில் உள்ள சரக் துறைமுகத்திற்கும், கிஷ் தீவுகளுக்கும் இடையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த கால நிகழ்வுகள்:
1990ம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் சுமார் 40,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.4ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஈரானில் பெரும் சேதத்தினை விளைவித்தது.
சென்ற மாதத்தில் 6.0 அளவுள்ள நிலநடுக்கம் ஒன்று ஆப்கானிஸ்தானை தக்கியது. இந்த நிலநடுக்கத்தினால் அந்நாட்டில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 1500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்தது தவித்துவருகின்றனர். இந்தியாவின் சில மாவட்டங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு ரூ.13,834 கடன் தரும் உலக வங்கி