தமிழகத்தில் பண்டைக்காலங்களில் இருந்தே முக்கனிகள் என்னும் சொல்லானது வழக்கத்தில் இருக்கின்றது. இந்த முக்கனிகள் எனக் குறிப்பிடப்படும் பழங்கள் தமிழகத்தில் மிகத்தொன்மையான வரலாற்றினைக் கொண்டுள்ளன.
மா, பலா, வாழை ஆகிய மூன்று கனிகள் தான் தமிழகத்தில் குறிப்பிடப்படும் அந்த முக்கனிகள். இந்த முக்கனிகளில் இன்று 200 வருடங்களாக உயிர் வாழும் பலாமரம் பற்றிய ஒரு வியப்பான செய்தியினைத் தான் தற்போது பார்க்கப்போகிறோம்.
பண்ருட்டியின் பெருமை..
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழமானது பரவலாக தமிழகம் முழுவதும் காணப்பட்டாலும், கடலூர்ப் பகுதிகளில் மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியானது பலாப்பழ உற்பத்தியில் முன்னணியில் உள்ள நகரமாய் திகழ்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பலாப்பழமானது தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு விற்பனையாகிறது.
பிற நாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் பலா மரங்களை ஒற்றைப்பயிராக வளர்க்கப்படுவது கடலூர் பகுதியில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பலாப்பழங்கள் அதிகம் காய்கின்றன. இந்த நாட்களில் ஒரு பலாப்பழமானது 100 ருபாய் முதல் 500 ரூபாய் வரைகூட விலை போகிறது.
2011ம் ஆண்டில் தமிழகத்தினை தாக்கிய தானே புயலினால் பெருத்த சேதத்தினை எதிர்கொண்டது கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களாகும்.
இந்த புயலினால் கடலூரில் உள்ள பலா, முந்திரி உட்பட பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. தானேவிற்குப் பிறகு பண்ருட்டி பகுதிகளில் பலாப்பழ உற்பத்தியே சில வருடங்களுக்கு குறைந்து போனது.
இப்படி பட்ட வலுவான புயலிலும் சிக்காத ஒரு மரமானது தனக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாற்றினைக் கொண்டுள்ளது மட்டுமல்லாமல், இன்று வரை 200க்கும் மேற்பட்ட பலாப்பழங்களை ஒவ்வொரு வருடமும் அளித்து வருகிறது..
ஆயிரம் காய்ச்சி..
பண்ருட்டி நகரில் இருக்கும் மளிக்கம்பட்டு கிராமத்தில் உள்ள ராமசாமி என்னும் 72 வயது விவசாயியின் நிலத்தில் கிட்டத்தட்ட 200 வருடங்களாய் ஒரு பலா மரமானது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தானே புயல் மட்டுமல்லாது, அதற்கு முன்னும் பின்னும் ஏற்பட்ட அதி கனமழைகளிலும் தப்பி இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பலா மரத்தினை ‘ஆயிரம் காய்ச்சி’ என்று அதன் உரிமையாளர் ராமசாமி குறிப்பிடுகிறார்.
‘இந்த தோப்பனாது பல காலமாகவே எங்களுடையதாய் இருந்துள்ளது. எனது முன்னோர்கள் வைத்த மரங்களில் இந்த ஒரு மரம் மட்டும் இன்னும் அதே வலிமையுடன் இருக்கிறது.
ஆயிரம் காய்ச்சி மரமானது நட்டு வைத்த பிறகு எட்டு வருடங்கள் கழித்தே காய்காய்த்ததாய் நான் சிறுவயதில் இருக்கும் போது கூறுவார்கள். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மொட்டுக்கள் இந்த மரத்தில் மலரும். அதில் சுமார் 350 மட்டுமே பழமாகும்.
மீதமுள்ள மொட்டுக்களை நாங்கள் வெட்டிவிடுவோம். இல்லையெனில் மரமானது பருத்துவிடும். அவ்வாறு நடப்பது மரத்திற்கு நல்லதல்ல. ஆயிரம் காய்ச்சியில் காய்க்கும் பழங்கள் ஒவ்வொன்றும் 10லிருந்து 80 கிலோ எடை வரை இருக்கும்.
இந்த பழங்களின் சுவை மிகவும் தரமானதாய் இருக்கும்.’ என்று ஆயிரம் காய்ச்சியின் உரிமையாளர் ராமசாமி கூறியுள்ளார்.
மேலும், ‘தானே புயலின்போது பண்ருட்டியில் உள்ள பலா, முந்திரி மரங்கள் பெரும் சேதத்தினை கண்ட நிலையில் ஆயிரம் காய்ச்சி மரத்திற்கு சில மேற்புற சிராய்ப்புகள் ஏற்பட்டது.
இலைகள் முழுவதினையும் இழந்திருந்தாலும் நிபுணர்களின் அறிவுரைப்படி பராமரித்ததில் மூன்று வருடங்களுக்குப் பிறகு ஆயிரம் காய்ச்சி காய்க்கத்தொடங்கி விட்டது.’ என்று குறிப்பிட்டுள்ளார் ராமசாமி.
ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் மொட்டுக்களை உற்பத்தி செய்வதால் இந்த மரத்திற்கு ஆயிரம் காய்ச்சி எனப்பெயரிடப்பட்டுள்ளதாக ராமசாமி கூறியுள்ளார்.
பாலூரில் இருக்கும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வந்திருந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த மரமானது 150 வருடங்கள் வரை வாழும் என்று கூறியிருந்தனர்.
அவர்கள் கொண்டு வந்திருந்த சாதகமானது 150 வருடங்கள் வரை மட்டுமே கணித்துக்கூறும் என்றும் கூறியிருந்தனர். ஆனால் இன்று ஆயிரம் காய்ச்சிக்கு 200 வயது ஆகின்றது. இந்த மரமானது இன்னும் 300 வருடங்கள் வரைக்கூட உயிர் வாழும் என்று ராமசாமி கூறுகிறார்.
இந்த விஷயத்துல விக்ரமும் விஜய்சேதுபதியும் ஒன்னுதான்! – சாமுராய்க்கும் 96-க்கும் உள்ள பந்தம்!