1000 ஆண்டுகள் பழமையான செம்பியன் மாதேவியின் உலோகச்சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான செம்பியன் மாதேவி சிலை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஃப்ரீ கேலரி ஆர்ட் எனப்படும் அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் கோனேரி ராசபுரம் என்னும் ஊர் உள்ளது. அந்த ஊரில் உள்ள உமா மகேஸ்வரர் ஆலயத்தில், 1000 ஆண்டுகள் பழமையான செம்பியன் மாதேவி சிலை இருந்தது. இந்நிலையில், 40 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த சிலை திருடுபோனதாக யானை ராஜேந்திரன் எனும் வழக்குரைஞர், கடந்த 2018-ம் ஆண்டு நாகப்பட்டினம் காவல்துறை ஆய்வாளரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியான ஐஜி பொன்மாணிக்கவேல் குழுவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, திருடு போன இந்த சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
மேலும், திருடு போன செம்பியன் மாதேவி சிலையை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சிலை, 1929-ம் ஆண்டு கடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
பிற்கால சோழர்கள் வரலாற்றில் செம்பியன் மாதேவி மிக முக்கியமான நபராவார். சோழ மன்னர்களுள் ஒருவரான கண்டராதித்த சோழரின் மனைவியான இவர், கி.பி 910 முதல் 1001ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்.
சிறந்த சிவ பக்தரான கண்டராத்தித்தரின் மறைவுக்குப் பிறகு, துறவு பூண்ட செம்பியன் மாதேவி, சோழ தேசமெங்கும் பல்வேறு செங்கல் கோவில்களை, கருங்கற்கோவில்களாக மாற்றும் பணியில் தன்னை அற்பணித்துக் கொண்டவர்.
செம்பியன் மாதேவி காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் இன்றும் தமிழகத்தில் நிலைத்து நிற்கிறது. கண்டராதித்தன்-செம்பியன் மாதேவியின் வாரிசான உத்தம சோழர், கண்டராதித்தரின் தம்பியான சுந்தர சோழருக்குப் பிறகு, சோழ நாட்டை ஆண்டார்.
சோழப் பேரரசர் ராஜேந்திரர் காலத்தில் செம்பியன் மாதேவிக்கு கோனேரி ராசபுரத்தில் உள்ள உமா மகேஸ்வரர் கோவிலில், உலோகச்சிலை வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 1-ம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை