தென்காசியில் காதல் திருமணம் செய்த பெண்ணை, அவரது பெற்றோர் தூக்கிச் செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே இருக்கும் கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினித். அதே பகுதியைச் சேர்ந்த நவீன் பட்டேல் என்பவரின் மகள் கிருத்திகா. இருவரும் காதலித்து கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை நாகர்கோயில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக பதிவு செய்தனர்.
மேலும், திருமணம் செய்ததில் பிரச்சனை எழும் என்பதால், பாதுகாப்பு கேட்டு குற்றால காவல்துறையிடம் இவர்கள் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், வினித் மற்றும் கிருத்திகா கடந்த பொங்கல் அன்று கோயிலுக்கு சென்று விட்டு காரில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது, காரை வழிமறித்து பெண் வீட்டார் தகராறு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்கு குற்றாலம் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால், இவர்கள் தமிழ்நாடு முதல்வர் பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மேல் இடத்திலிருந்து அழுத்தம் வரவே, புகாரை திரும்பப்பெறுமாறு மகன் வீட்டாரை காவல்துறை வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று தென்காசி குத்துகல்வலசை பகுதியில் உறவினரது வீட்டிற்கு வினித், அவரது மனைவி கிருத்திகா மற்றும் பெற்றோருடன் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த பெண் வீட்டார், வினித் மற்றும் அவரது பெற்றோரை தாக்கி, கிருத்திகாவை தாக்கி வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பெண்ணை மீட்டு தருமாறு மகன் வீட்டார் கோரிக்கை வைத்தனர்.
மேலும், பெண் வீட்டார் கிருத்திகாவை இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து கிருத்திகாவின் பெற்றோர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கிருத்திகாவை தேட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாயிரம் ரூபாய் தாள் வடிவில் திருமண அழைப்பிதழ் – அசத்தும் தந்தையின் ‘கிரியேட்டிவ்’!