நான் செய்த வெறுக்கத்தக்க இச்செயலுக்காக எனது திரைப்படங்களைக் காண மக்கள் தயாராக இல்லை என்றால், அவர்களது முடிவை நான் முற்றிலும் மதித்து ஏற்றுக் கொள்கிறேன் என்று நடிகர் வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
திரையுலகின் மிக முக்கிய விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் விருது. ஆஸ்கார் விருது வழங்கும் விழாவானது கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த 94-ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழா, கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியின் ஹாலிவுட் டால்ஃபி திரையரங்கில் நடைபெற்றது.
இந்த விருது விழாவை பிரபல காமெடி நடிகர் கிரிஸ் ராக் அவர்கள் தொகுத்து வழங்கினார். இவர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும்போது, பலருக்கும் ப்ரியப்பட்ட மற்றும் பிரபல நடிகரான வில் ஸ்மித் அவர்களின் மனைவியான ஜடா பின்கட் ஸ்மித்தின் சிகை அலங்காரம் குறித்து கிண்டல் செய்தார்.
இதைப்பொறுக்காத வில் ஸ்மித் அவர்கள் மேடையில் ஏறி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக்கின் கன்னத்திலேயே அறைந்தார். இந்நிகழ்வு உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்வுக்குப் பிறகு அதே மேடையில் வில் ஸ்மித் அவர்களுக்கு கிங் ரிச்சர்ட் திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. விருதை வாங்கும்போது, கிறிஸ் ராக்கை அறைந்ததற்கு மன்னிப்பு கேட்டார், வில் ஸ்மித்.
இதைத்தொடர்ந்து, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்சஸ் உறுப்பினர் பதவியிலிருந்து வில் ஸ்மித் ராஜினாமா செய்தார். ஆஸ்கர் அகாடமியும் அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வில் ஸ்மித் ஒரு சேனலுக்கு இன்டர்வியூ கொடுத்துள்ளார். அதில், ‘ஆஸ்கர் விருது விழாவில் நான் நடந்துகொண்ட விதம் குறித்து மிகவும் வருத்தப்பட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தெரிவித்துள்ளதாவது:
அந்த இரவு மிகவும் கொடூரமானதாக இருந்தது. அன்று நான் செய்த செயலை நியாயப்படுத்தவில்லை இருப்பினும், அதற்காக ஒரு மனிதனாக நான் என்னை வெறுத்தேன். நான் செய்த வெறுக்கத்தக்க இச்செயலுக்காக எனது திரைப்படங்களைக் காண மக்கள் தயாராக இல்லை என்றால், அவர்களது முடிவை நான் முற்றிலும் மதித்து ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால், அதேசமயம் எனது செயல்களால் படக்குழுவிற்கு எந்தப் பாதிப்புகளும் ஏற்படக் கூடாது என விரும்புகிறேன்.
இவ்வாறு வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அடுத்தப் படத்தில் நான் வில்லனா? – விஷால் சொன்ன விளக்கம்..