நாட்டில் நிலவும் வெறுப்பு மற்றும் மதவெறிக்கு எதிராக போராடுவோம் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம், நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெறும் நிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி உள்பட பல விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திற்கு முன்பாக ராகுல்காந்தி தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது:
காங்கிரசின் 85-வது கூட்டம் என்பது நமது பாரம்பரியத்தில் பகிரப்பட்ட ஒரு பார்வை. அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் நமது கலாச்சாரம் நமது உண்மையான வலிமை ஆகும்.
தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை சமுதாயத்தினர், பெண்கள், இளைஞர்களுக்கு பிரதிநித்துவம் அளிப்பதே நமது நோக்கம் ஆகும். நாட்டில் நிலவி வரும் மதவெறி, வெறுப்புணர்வு சூழ்நிலைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.
ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களுக்காக காங்கிரஸ் தொடர்ந்து குரல் எழுப்பும் என பதிவிட்டுள்ளார்.
மம்முட்டி படத்தின் மீது பிரபல தமிழ் இயக்குநர் குற்றச்சாட்டு!