சரத்குமார்தான் அனைவரையும் கெடுக்கிறார் என்று எப்படி சொல்வீர்கள்? என நடிகரும், சமத்துவ கட்சியின் தலைவருமான சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தினை அறிமுகப்படுத்தி தற்கால இளைஞர்களை ஒரு நாசகார கூட்டம் சீரழித்து வருகின்றன என்றும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தின் மூலம் தமிழகத்தில் இளைஞர்கள் பணம் சம்பாதிக்கும் ஆசையில் லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர் என்றும் பண இழப்பை தாங்க முடியாத சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் பல கருத்துகள் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தின் மீது நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த நடிகர் சரத்குமார் மீது சமூக வலைதளங்களில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். நடிகர் மட்டுமே அல்லாது, அரசியல் கட்சி தலைவராகவும் முன்னாள் எம்.பி-யாகவும் இருந்து கொண்டு, பலரும் தங்கள் பணத்தை இழப்பதற்கு காரணமாக இருக்கும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விளம்பரத்தில் நடிப்பது தவறு என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து சரத்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு சரத்குமார் கூறிய பதிலாவது:
“ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதை முதலில் அரசிடம் கேளுங்கள். நான் நடிப்பது பற்றி இரண்டாவது கேளுங்கள்.
ஆன்லைன் ரம்மியை நிறுத்த வேண்டும் என அனைத்து கட்சிகளும் இப்போது சொல்கின்றன. ஆனால், ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் சூதாட்டம் பல விதத்தில் மக்களுக்கு பாதிப்பு என முதலில் இருந்தே நாங்கள் கூறி வருகிறோம்.
ஆன்லைன் வர்த்தகத்தையும் சரி, ஆன்லைன் விளம்பரத்தையும் சரி கட்டுபடுத்துவது அரசுதான். எனவே, அரசு முடிவு எடுத்து ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்ட ஒன்று என சொன்னால், தடை செய்ததை நான் எப்படி பயன்படுத்துவேன்? தடை செய்த ஒன்றுக்கு நான் எப்படி விளம்பரப்படுத்துவேன். நீங்கள் (அரசு) தடையே செய்யவில்லையே. நீங்கள் தடை செய்யுங்கள், அது தானாக நிறுத்தப்படும். சரத்குமார்தான் அனைவரையும் கெடுக்கிறார் என்று எப்படி சொல்வீர்கள்?
ஆன்லைனில் ரம்மி ஆட்டம் மட்டும் அல்ல, கிரிக்கெட் உள்ளிட்ட எவ்வளவோ ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் உள்ளன. அதுவும் சூதாட்டம்தான். இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக நிறுத்தினால்தான் இதிலிருந்து எல்லாரும் விடுபடுவார்கள்.
குடிப்பழக்கம் குடியை கெடுக்கும். ஆனால், குடிக்காமல் இருக்கிறார்களா? குடிக்காதீர்கள் என நானும் தொடர்ந்து கூறி வருகிறேன். இதேபோல் புகைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு. ஆனால் தயாரிப்பதை ஏன் நிறுத்தவில்லை? எனவே உலகத்தில் எல்லாமே இருக்கிறது, நீங்கள் அதைப்பார்த்து கெட்டுப்போகாதீர்கள், மனப்பக்குவத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். நல்லவையும் இருக்கின்றன, தீயவையும் இருக்கின்றன. நல்லவற்றை எடுத்துக்கொள்ளுங்கள், தீயவற்றை விட்டுவிடுங்கள் என்று சொல்கிறோம். நாம் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால் அவர்கள் கடையை மூடிவிட்டு போய்விடுவார்கள்.”
இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.