ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கருத்து மோதல் வலுத்துள்ள நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அதிமுக செயற்குழு விரைவில் கூடவுள்ள நிலையில் நாள்தோறும் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்று காலையில் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயக்குமார், செம்மலை, கட்சியின் முன்னாள் அவைத்தலைவர் பொன்னையன், வைகை செல்வன் ஆகியோர் கூடி ஆலோசித்தனர். இந்த கூட்டத்தில் நடக்கவுள்ள செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
இதற்கிடையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சேலத்தில் அவரது ஆதரவாளர்கள் வீட்டில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இவரது இல்லம் முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதுபோல் சசிகலா அவரது வீட்டில் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை முடித்துக்கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஒற்றைத் தலைமை கருத்தை ஆதரித்துப் பல நிர்வாகிகள் பேசினர். ‘யார் அந்த ஒற்றைத் தலைமை?’ என்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்” என்று கூறியுள்ளார்.
ஒற்றைத் தலைமைக்கு வரப்போவது எடப்பாடி பழனிசாமியா? அல்லது ஓ.பன்னீர்செல்வமா? என்ற எதிர்பார்ப்பும் அ.தி.மு.க. தொண்டர்களிடம் மட்டுமின்றி மக்கள் மனதிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. கட்சியில் ஏற்படும் சிறு சிறு தகராறுகள் வராமல் இருக்க வேண்டும் என்றால் ஒற்றைத் தலைமைதான் சிறந்தது என்ற கருத்து அ.தி.மு.க.வில் 99 சதவீதம் பேரிடம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்ட்ராய்டு டூ ஐபோன்: வாட்சப் தரவுகளை மாற்றுவது எப்படி??